Posted by: Deepak Venkatesan on: March 9, 2005
செப்டம்பர் 2004-இல், மின்னஞ்சல் வழியாக சில நண்பர்கள் நாங்கள் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, EEE Dept-ஐச் சேர்ந்த நண்பர் சீனிவாஸ் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. நம் எல்லோருக்கும் சமுதாய மேம்பாடு, நலிந்தோர் நலன், பரோபகாரம் போன்ற விஷயங்களில் நாட்டம் உண்டு. நாம் ஏன் சமூக நல இயக்கம் ஒன்றைத் தொடங்கக் கூடாது என்று நண்பர் எண்ணினார். இக்கருத்தை எங்களிடம் எடுத்து வைத்தார். அனைவரின் இசைவுடனும், ஆதரவுடனும் தொடங்கிய சமூக நல இயக்கம் தான் தியா (Diya). இதற்கு, slogan ஆக, Illuminating lives… என்பது தெரிவு செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை எத்தனையோ வாழ்வுகளில் ஒளியேற்றியிருக்கிறது.
எங்கெல்லாம் orphanageகளுக்கு நிதியுதவி, பொருளுதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அவ்வுதவிகளைப் புரிந்து வருகிறோம். அங்கத்தினர் மற்றும் பிறர் அளிக்கும் நிதியைக் கொண்டு எங்களால் இயன்ற நல உதவிகள் செய்கிறோம். நலிந்தோர் மனைகளுக்குச் சென்று, அவர்களுக்கு விருந்தளித்து, குழந்தைகளுடன் விளையாடி, அவர்களை மகிழ்வித்து, அவர்களின் அன்பில் திணைக்கிறபோது, எங்கள் மனதிற்குள் ஒரு இனம் தெரியாத பூரிப்பு மலர்வதை ஒவ்வொரு தியா அங்கத்தினரும் சொல்வார்.
செப்டம்பரில் தொடங்கிய “தியா”வில் இன்று சுமார் 125 பேர் அங்கத்தினராக உள்ளனர். இது வரைக்கும் ரூ.30,000/- அளவிற்கு சமூக நல விஷயங்கள் செய்துள்ளோம் என்பதைக் கூறும்போது, எங்களுக்குள்ளேயே தியாவின் ஒளி பிரகாசிக்கிறது.
Jeroham ministries, உதவும் உள்ளங்கள், அன்புக் கரங்கள், சுபத்ரா ஹோம் போன்ற பத்திற்கும் மேல்பட்ட ஹோம்களுக்கு நிதி, பொருட்கள் போன்ற உதவிகளைச் செய்திருக்கிறோம். தியா சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு பல நல உதவிகள் புரிந்தோம். ஒரு இரத்த தான முகாமிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்.
7 மாதங்களுக்கு முன்னால் ஒரு கனவு போல் இருந்த தியா, இன்று பல சாதனைகளுடன் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் செய்வதற்கு எத்தனையோ திட்டங்கள் கனவுகளாக இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபட்டு, சமுதாயத்தை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் re-engineer செய்வதே எங்கள் நோக்கம். தியா பற்றிய விவரங்களுக்கு, எங்கள் இணையத் தளத்தைக் காண்க: http://diya.org.in