Amusingly Simple

நான் செல்லரித்துப் போன கதை

Posted by: Deepak Venkatesan on: March 10, 2005

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனக்கு ஒரு சின்ன ஆசை. ஒரு மாடர்ன் பிகருக்கு பிராக்கட் போட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் கூடச் சுலபமாக நிறைவேறியிருக்கும். ஆனால் நான் ஆசைப்பட்ட விஷயம் அவ்வளவு எளிதானதல்ல. அது என்ன ஆசை என்கிறீர்களா? வேறொன்றுமில்லை… ஒரு செல்லுலர் போன் வாங்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு.

வெற்று டாம்பீகம் எதற்கு என்று அடக்கமாக இருந்த எனக்கு, எல்லோரும் செல் வைத்துக்கொண்டு, காற்றோடு கதைபேசுவதைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஒரு செல் வாங்கினால் நன்றாக இருக்குமே என்று தோன்றத் தொடங்கியது. அப்போது தெரியவில்லை… ஏழரை சனி எனக்கு ஆரம்பித்து விட்டது என்று!

சரி என்று ஒரு சாதாரண Nokia செல்பேசி ஒன்று வாங்கினேன். அதுவரை செல்லில் பேசி அறியாத எனக்கு, செல்லைக் காதருகே வைத்துக் கொண்டு காற்றில் பேசினாலே போதும் என்று அப்போது தெரியாது. நாம் பேசுவது எங்கே மறுமுனையில் இருப்பவருக்குக் கேட்காமல் போகுமோ என்று, தெருக்கோடி அரசியல்வாதி போல் கத்திக் கத்தி நான் பேச, வீட்டில், பேருந்தில், சாலையில், ரெஸ்டரண்ட்டில் என்று எல்லோரும் என்னை ஒரு விசித்திரமான ஜந்துவைப் போல் பார்க்க ஆரம்பித்தார்கள். அதிநாகரிகச் சமூகத்தில் நான் அநாதையாகி போனதுபோல ஒரு பீலிங் எனக்கு.

அதை எப்படியோ சுதாரித்து, சரியாகப் பேசப் பழகிக்கொண்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் வந்தது SMS. அரை நிமிடத்திற்கு ஒரு முறை டொய்ங்… டொய்ங்… என்று அலறிக் கொண்டு, நட்பின் ஆழத்தை, காதலின் புனிதத்தை, இன்னும் புலப்படாத எத்தனையோ தத்துவார்த்த போதனைகளை அள்ளிக் கொடுத்தனர் நண்பர்கள். நண்பர்களின் SMS மழையில் நனைந்து, நீராடி, நீந்தித் திளைத்து, ஜலதோஷம் பிடிக்காத குறைதான். அர்த்த ராத்திரியில் கூட அடங்க மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள் நண்பர்கள். மேலே இருப்பவன் மேல் பாரத்தைப் போட்டு, எல்லாம் அவன் செயல் என்று அடக்கமாக அங்கலாய்த்துக் கொண்டேன்.

செல்பேசி வாங்கியாச்சு, எல்லாம் முடிஞ்சாச்சு என்று dormancy-க்குள் போக நினைத்த எனக்கு புதிய தலைவலிகள் காத்திருக்கின்றன என்று அப்போது தெரியாது. ஒரு நன்னாளில், விடிந்ததும் விடியாததுமாக என் நண்பன் என்னைத் தேடி வந்தான். ‘டேய் நான் கலர் மொபைல் வாங்கிட்டேன்’ என்று உள்ளம் குளிர, நா நெகிழ, என்னிடம் கூறினான். அவனின் புதிய சொத்தைக் கையில் வாங்கி, அதன் அழகான பொத்தான்களைப் பிரஸ்ஸிப் பார்த்த போது, லேசாக அதன் மேல் காதல் மலரத் தொடங்கியது. வீட்டு முகப்பில் கட்டியுள்ள திருஷ்திப் பூசணி போல என் செல் என்னைப் பார்க்கத் தொடங்கியது.

கலர் செல் மேல் ஏற்பட்ட காதலை வளர்த்துக் கலியாணமாக்கலாம் என்று plan பண்ணிக் கொண்டிருந்த சமயம், இன்னொரு நண்பன் ஓடோடி வந்தான். GSM டா, GPRS டா, என்று நான் கல்லூரியில் digital communication வகுப்பில் அரைத் தூக்கத்தில் கேட்ட jargon-களைச் சொல்லி என்னை பயமுறுத்தினான். என் உருவத்தை அவனின் செல் காமிராவில் பிடித்து, திரையில் கைது செய்து, ஆரவாரித்தான். அழகான பிகர்களைப் பார்த்து ஜொள்ளு விடும் விடலை போல நானும், செல்லுலாரின் சரித்திரத்தில் இத்தனை முன்னேற்றமா என்று நினைத்துப் பெருமூச்சு விட்டேன்.

ஓகே, அதையாவது வாங்கினேனா என்றால், அதுதான் இல்லை. ஒரு நாள், கடற்கரை – திருமயிலை பறக்கும் இரயிலில் பயணித்த போது, ஒரு ஹீரோ, சுற்றியிருந்த பிகர்களுக்குத் தன் செல்லில் இருந்து, பின்தெருப் பசங்க (அதாங்க Backstreet Boys) ஆல்பம் பாடலை mp3-யில் ஒலிபரப்பி, சேவித்துக் கொண்டிருந்தான். இன்னொரு கூட்டம், யாருடைய செல்லில் அதிக நேரம் வீடியோ ஓடும் என்று பட்டி மன்றித்துக் கொண்டிருந்தார்கள்.

இனி பொறுப்பதில்லை தம்பி, என்று உடனே அன்றைய தேதியில் சகல feature-களும் கொண்ட state-of-the-art செல்பேசியை வாங்கி வந்தேன். சொல்லியடங்காத மகிழ்ச்சி எனக்கு. பாட்டு கேட்கலாம், படம் பார்க்கலாம், SMS அனுப்பலாம், MMS அனுப்பலாம், GPRS உண்டு, ரேடியோ-mp3 player உண்டு, infra-red, bluetooth என்று வண்ண வண்ணமான தொழில்நுட்பங்கள் வேறு. ‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா’ என்று எனக்குப் பிடித்த சிவாஜி பாடலை முணுமுணுத்துக் கொண்டே உலா வந்தேன்.

இன்று ஒரு மாசமாகிறது. டிவியில் படம் பார்க்கிறேன், பிளேயரில் பாட்டு கேட்கிறேன், காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன், கணினியில் இணைய உலா வருகிறேன். செல்பேசி மட்டும் கேட்பாரின்றிச் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது.

3 Responses to "நான் செல்லரித்துப் போன கதை"

state-of-art போனை நீங்க சம்பாதிச்சி வாங்கினதா? இல்ல வீட்டுலேயா?

Athu appa ammavukku alva kuduththu
vangiyathuthane

அன்புள்ள அல்வாசிட்டி அவர்களே,
இந்தப் பதிவில் பாதி உண்மை, பாதி உடான்ஸ்… என் ஆரம்ப கால அனுபவங்களையும், என் நண்பனின் அனுபவங்களையும் merge பண்ணி எழுதியிருந்தேன். உண்மையில் state-of-the-art செல்பேசி வாங்கி வெட்டியாய் வைத்திருப்பவன் என் நண்பன் தான். அவனின் புலம்பல்ஸைத் தான் நான் பதிவு செய்தேன்.
- தீபக் :)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

Please log in to WordPress.com to post a comment to your blog.

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Deepak Venkatesan