Amusingly Simple

சில முயற்சிகள்…

Posted by: Deepak Venkatesan on: March 19, 2005

எனது நண்பர் கவிஞர் புரட்சித்தேனீ எழுதிய கவிதை ஒன்றில் இந்த வரிகள். நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று யாரும் வீட்டில் நரி வளர்ப்பதில்லை. பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்று யாரும் வீட்டில் பூனை வளர்க்கத் தயங்குவதில்லை. விசாரித்துப் பார்த்ததில், தம்மிடம் யாரோ சொன்னதாகச் சொன்னார். இருந்தாலும், தினம் தினம் இப்படிப்பட்ட ஹாஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. நாமெல்லாம் எந்த அடிப்படையில் முடிவுகள் எடுக்கிறோம் என்பது எனக்கு இன்னும் விளங்கியபாடில்லை. அமாவாசை அன்று காக்கைக்குப் படையல் வைக்க ஒரு கூட்டம் அலைமோதும். காக்கை சாப்பிட்ட பின்னால் தான் எனக்கு சாப்பாடு என்று அம்மா கண்டிப்பாகக் கூறுவாள். எல்லா நாளும் சுற்றிச் சுற்றி வரும் காக்கைகள் அன்று மட்டும் குடும்பத்துடன் கிஷ்கிந்தா போய் விடுமோ என்னவோ தெரியாது. கா…கா… என்று மனிதக் காகங்களின் ஒலிதான் மலிந்திருக்கும். காக்கை உன்னிடம் வடையும் பாயசமுமா கேட்டது? ஒரு மீன் துண்டைப் போட்டால், எல்லா காக்கைகளும் வீட்டின் முன் ஆஜர் என்று வாழ்வியல் உண்மையைச் சொன்னால், அம்மா முறைப்பாள். பாவம் அவை எத்தனை வீடுகளில் தான் தரிசனம் தருவது? எத்தனையோ முறை, வெயிலில் வடகம் காய வைக்கும் போது, இதே காக்கையை விரட்ட கையில் கருப்புக் குடையுடன் காவல் காத்த ஞாபகங்கள். அதற்கெல்லாம் சேர்த்துத் தான் காக்கைகள் சங்கத்தில் முடிவெடுத்துப் பழிவாங்குகின்றனவோ என்னவோ, என்பேன். தம் பவரைக் காட்ட ஒரு நாள் தானே கிடைக்கிறது அவற்றிற்கு. எப்போதும் என் அறையின் ஜன்னலுக்கு வெளியே காதலும் கரைதலுமாக இருக்கும் ஜோடிக் காகங்கள் கூட அமாவாசை அன்று அப்பீட்டாகி விடும். காக்கை சாப்பிட்டதா இல்லையா என்று மறைந்திருந்து கண்காணிக்க என் தம்பியை appoint பண்ணிவிட்டு நான் நைசாக ஜகா வாங்கிக் கொள்வேன் – வடைக்காக. நம்மூரில் வாக்குகளுக்காகக் கஞ்சித் தொட்டிகள் – அமாவாசைக்காகக் காக்கைகளுக்கு விருந்து. Funny! எனக்குக் கவிதை எழுத வராது. என்றாலும் கஷ்டப்பட்டு எழுத முயல்வேன். எதையும் வற்புறுத்திச் செய்ய வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விட்டுவிட்டேன். எங்கோ படித்ததாக ஞாபகம் – நல்ல இலக்கியம் உண்மையான உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டு உருவாகிறது. கவலையே இல்லாமல் காலம் தள்ளுகிறவனுக்கு இலக்கியம் எட்டாக்கனி. எனக்கு, ப்ராஜக்டையும் அசைன்மென்ட்களையும் எக்ஸாமையும் தாண்டிக் கவலைகள் இல்லை. கவிதையும் வரவில்லை. நண்பர்கள் பலருக்கு காதலிதான் இன்ஸ்பிரேஷன். காதல் என்று சொன்னதும் எப்படித்தான் கவிதை வருகிறது என்பது எனக்குப் புரியாத புதிர்தான். எனக்கும் காதலுக்கும் கொஞ்சம் தூரம். காதல் என்பது ஓவர் ரியாக்டிவ் சென்டிமெண்ட் என்று கமெண்ட் செய்ததுண்டு. ஒரு வேளை நானும் காதலித்தால், கருத்தை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவு stubborn ஆனது இல்லை. இந்திய ஜனாதிபதியாகப் போகிறவர் கலாம் என்ற தமிழர் என்று அறிவிக்கப்பட்ட போது, அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் கிளம்பியது. கவிதைகள் படையெடுத்தன. அடியேனும் கவிதை வார்த்து, வகுப்பில் வாசித்தேன். சில வரிகள் நினைவில் உள்ளது. நானும் பொறியாளன், நீயும் பொறியாளன். நான் வெறும் பொறியாளன், நீ தீப்'பொறியாளன்.' உன் தீப்பொறியில் பிறந்தவைதான் அக்கினிச் சிறகுகள், எழுச்சி தீபங்கள். அதன் பிறகு, நமக்கெதுக்கு வம்பு என்று கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். நண்பர்களோடு எப்போதாவது கவிதை மன்றங்களுக்குப் போய் கவிதை வாசிப்பைக் கேட்பதோடு சரி. கல்லூரியிலிருந்து ஒரு பேச்சுப் போட்டிக்கு அனுப்பியிருந்தார்கள். நண்பனோடுப் போயிருந்தேன். திநகர் வெங்கட்நாராயணா ரோட்டில். எப்போதும் பார்க்கும் பழகிய முகங்கள். கவி�
��ைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். (வாசிக்கச் சொல்லாத வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை). கவிஞனின் வேகத்திற்குத் தடை போடக் கூடாது, சென்சார் பண்ணக் கூடாது என்று நண்பர் பழனி (பத்திரிகையாளர்) விவாதித்துக் கொண்டிருந்தார். நண்பர் கவிஞர் பாரதிபாபு எழுதிய ஒரு கவிதை, நம் சேரிக் குழந்தைகளின் பரட்டைத் தலையில் எண்ணெய் இல்லை பரவாயில்லை – நம் அரசியல்வாதிகள் பலரின் தலையில் மூளையே இல்லை ஒரு அரங்கில் இந்தக் கவிதையை வாசித்து மாட்டிக் கொண்டாராம். பாரதி எழுதுகிற கவிதைகள் எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நண்பர் கூற, இடையே வந்து அரைகுறையாகக் கேட்ட என் நண்பன், 'ஆமாம், ஆனால் பாவம் சிறு வயதிலேயே இறந்து போய்விட்டார்' – என்று சுப்பிரமணிய பாரதியாரை நினைத்துச் சொல்ல, 'அய்யய்யோ, அப்படியா, ரெண்டு நாட்களுக்கு முன்னால் தானே பார்த்தேன்' என்று அவர் சொல்ல, 'ஓ நீங்கள் பாரதிபாபுவைச் சொல்கிறீர்களா?' என்று என் நண்பன் சமாளிக்க, கொல்லென்ற சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது. நான் மேடையில் பேசுவதைக் கேட்டு, நீங்கள் இலங்கைத் தமிழரா? என்று அடிக்கடிப் பலரும் கேட்பதுண்டு. நான் தமிழனே இல்லை, என் தாய்மொழி கன்னடம் என்று நான் சொன்னவுடன், எதையோ பார்த்தது போல் அவர்களின் முகம் மாறிவிடும். அய்யோ, காவிரியில் தண்ணீர் வராததற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்லி நகர்ந்துவிடுவேன். தண்ணீர்ப் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக்கப்பட்டு, இப்போது மொழிப் பிரச்சனையாக mutate ஆகியுள்ளது. இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகிறதோ தெரியவில்லை. இந்தியத் தாயே, ஹவாலாவில் நூறு கோடி அன்னியச் செலாவணியில் அய்ந்நூறு கோடி என்று எல்லோரும் சேர்ந்து உன்னைத் திவாலாக்கிவிட்ட போதும், தாய் தானே, மன்னிக்க மாட்டாயா? என்று நண்பர் புரட்சித்தேனீ எழுதியிருந்தார், இன்னொரு கவிதையில். எல்லாம் நம்ம வசதிதான். 'தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை – மன்னிப்பு' என்று சொல்லும் நிஜ வாழ்க்கை ரமணா யாரும் இல்லையே என்ற ஒரு வருத்தம் தான் எனக்கு.

Advertisement

4 Responses to "சில முயற்சிகள்…"

காக்கை உன்னிடம் வடையும் பாயசமுமா கேட்டது? ஒரு மீன் துண்டைப் போட்டால், எல்லா காக்கைகளும் வீட்டின் முன் ஆஜர் என்று வாழ்வியல் உண்மையைச் சொன்னால், அம்மா முறைப்பாள்

வாழ்வியல் யதார்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

என் பதிவையும் படிக்கிற அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
-தீபக்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Deepak Venkatesan

  • Deepak: The same is true for e-stamping also. Type as much as possible on the page-1 and the rest on the next page. Authorities expect that the contents star
  • suchintya: hi Deepak, I think you misread the query. I am asking about estamping and not the normal stamp paper agreement. After I have received the estamp pa
  • Deepak: Start right on the first page where you got the franking done, and where the registrar has signed. Even if the space is small here, start from the fro