Posted by: Deepak Venkatesan on: May 6, 2006
அது ஏனோ தெரியவில்லை… நான் சாலையில் மோட்டார் பைக்கில் போகிற போது, நிச்சயமாக இரண்டு ஆட்டோக்கள் எனக்கு வழிவிடாமல் எனக்கு முன்னால் போவது வழக்கமாகிவிட்டது. இல்லை, ஹைதர் காலத்து ஸ்கூட்டர் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிற நபர், தன்னைத் தாண்டிச் செல்லும் வாகனங்களையெல்லம் பொருட்ப்டுத்தாமல், மிகுந்த சிரத்தையோடு ஜாக்கிரதையாகத் தன் வாகனத்தை மெல்ல மெல்ல நகர்த்துவார். அதுவும் இல்லை என்றால், ஜுராஸிக் பார்க்கில் ஆடி அசைந்து சர்வகாலமும் தனக்கே உரியதாக எண்ணி நடைபோடும் வெஜிட்டேரியன் டைனோசர்கள் போல மாநகரப் பேருந்துகள் – அதை எப்படியாவது சைடில் முந்திச் செல்லலாம் என்றால், முன்னாலிருந்து முறைக்கும் ஜனம். இதனை எல்லாம் பொறுத்துப் போகத்தான் வேண்டி இருக்கிறது. அந்த இடத்தில் எதுவுமே செய்ய முடிவதில்லை. அவர்களைத் முறைத்துக் கொள்ளவாவது ஒரு இடம் வேண்டுமல்லவா? நேரில் அட்ஜஸ்ட் பண்ணினாலும், பின்னால் பினாத்தவாவது ஒரு கருவி வேண்டுமல்லவா? அதனால் மிகுந்த ஆர்வத்தோடு என் வலைப்பதிவிற்குத் மறுதிறப்பு விழா நடத்திவிட்டேன்.
இன்னும், அலுவலகத்தில் நிறுத்தி வைக்கிற என் பைக்கில் அசிங்கம் செய்துவிட்டுப் போகிற காக்கை, காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய குற்றத்துக்காக இரண்டரை நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு உட்காரும்படி படத்தை எடுக்கிற டைரக்டர், என் காலுக்குப் பொருந்துகிற 12 சைஸ் செருப்பைத் தயாரிக்காமல் ஏமாற்றுகிற காலணி நிறுவனங்கள், கலர் படமே இல்லாமல் வெறும் எழுத்துகளில் செய்தி சொல்லும் ‘எகனாமிக் டைம்ஸ்’, கலர் கலராகப் படங்களையும், படங்களில் உள்ள நபர்களைப் பற்றிய கில்மா செய்திகளையும் மட்டுமே போட்டு, அதையும் ஒரு ரூபாய் விலைக்குக் கொடுத்து, என்னைப் போன்ற அப்பாவி இளைஞர்களை வாங்க வைக்கிற ‘டெக்கன் குரோனிக்கல்’, சிக்னலில் பச்சை விழுந்தவுடன், தூக்கம் தெளிந்து நான் எழிவதற்குள், பளீரெனப் பரிபோல் பறந்து சென்று எனக்கு ‘பெப்பே’ காட்டும் ‘பஜாஜ் பல்ஸார்’, பைக்கில் செல்லும் போது சாலையை கவனிக்க விடாமல் தன்னைக் கவனிக்கச் செய்யும்ப்டி உலா வருகிற ஃபிகர்கள், காந்தி நோட்டு வாங்கிக் கொண்டு உப்புச் சப்பில்லாத எதை எதையோ சமைத்தோ சமைக்கமலோ தருகிற இத்தாலியன் ரெஸ்டரண்ட், இன்னும் இன்னும் இன்னும் அது இது என்று எல்லாமே தப்பப் போவதில்லை என்னிடமிருந்து…
பல நாட்களாக வேலைப் பளுவாலும், சூழ்நிலை மாற்றங்களாலும், வலையில் தொடர்ந்து எழுத முடியாமல் போனது. அதனால், இந்த முறை தொடங்கும் போதே, நமக்கு விருப்பமான ஒரு தலைப்பாக இருந்தால், என்ன வேலையாக இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு எழுதுவதற்கு நல்ல ‘இன்ஸ்பிரேஷனா’க இருக்குமே என்று எண்ணினேன். அதனால் தான் என் வலைப் பதிவிற்கு, ‘ஆனியன் ரவா மசாலா’ என்று பெயரிட்டேன். ரவா தோசை என்றாலே நாவில் நீர் ஊறும் சுவை. அதிலும் ஆனியன் ரவா என்றால் கேட்கவே வேண்டாம். இன்னும் மசாலாவும் சேர்ந்து கொண்டால், அதன் சுவையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதே போல என் இடுகைகளையும் சுவையாகப் பரிமாற முயல்கிறேன். நீங்கள் என் தளத்திற்கு வந்து என் இடுகையை இது வரை படித்ததற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுகிறேன்… பின்னூட்டமிட்டு (Comments) விமர்சியுங்கள்.
May 16, 2006 at 9:30 pm
Inspiration from Blog ‘Idly Vadai’?
Jus Kidding. Good start & all the best
- Ananth