Posted by: Deepak Venkatesan on: November 1, 2006
தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் சில பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியிருந்த ‘மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸி‘, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாட்டைக் கொண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்‘ உதயமானது நவம்பர் 1, 1956-இல். மாநிலங்கள் ம்றுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act, 1956) அமலாக்கப்பட்டதால், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று மொழி அடிப்படையில் தனித்தனி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைக்குச் சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடகாவில் இந்நாளை, ‘கன்னட ராஜ்யோத்ஸவா‘ (Rajyotsava day) என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கேரளாவில் ‘கேரளப் பிறவி தினம்‘ என்று பெயர். ஆனால், அப்போது பிரிக்கப்பட்ட போது, மெட்ராஸ் ஸ்டேட், மைசூர் ஸ்டேட், நிஜாம் ஸ்டேட், கேரளா ஸ்டேட் என்று தான் பெயரிடப்பட்டன. பின்னர் 1968-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது யாவரும் அறிந்ததே.
கர்நாடகம் 1956-இல் தனியாகப் பிரிக்கப்பட்டாலும், மைசூர் என்ற பெயர் தான் இருந்தது. பின்னர் 1973-இல் கர்நாடகா என்ற பெயர் பெற்றது. அன்று முதன் ‘கன்னட ராஜ்யோத்ஸவம்’
கொண்டாடப்படுகிறது.
அதே போல, சுதந்திரத்திற்கு முன்னால், திருவாங்கூர், மலபார், கொச்சி என்று பிரிந்திருந்த மாநிலங்கள், கேரளா என்ற புதிய மாநிலமானது 1956-இல் தான். உலகெங்கும் இருக்கிற மலையாள நண்பர்கள், இந்நாளைக் ‘கேரளப் பிறவி’ என்று கொண்டாடுகின்றனர்.
இன்றைய மெட்ராஸ் ஸ்டேட்டில் ஐக்கியமாகியிருந்த ஆந்திராவைப் பிரித்துத் தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை நெடுநாளாக இருந்து வந்தது. ‘மெட்ராஸ் மானதே’ என்று கோஷமிட்டு சென்னையைத் தலநகராகக் கொண்ட ஆந்திரா அமைக்க வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றன. இருந்தாலும், அன்றைக்கு மாநிலத்திலும் மத்தியிலும் தமிழர்களின் ‘கை’ ஓங்கியிருந்ததால், சென்னை தமிழகத்திற்கே கிடைத்தது. 1952-இல் ‘குர்நூலை’த் தலைநகராகக் கொண்டு ஆந்திரா அமைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் தான் தெலங்கானா ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டு, ‘ஐதராபாத்’தைத் தலைநகராகக் கொண்டு இன்றைய ஆந்திரா பிறந்தது.
ஆமாம் ராகவன். 1953-இல் தான் ஆந்திரா பிறந்தது. இதை நான் என் பதிவில் குறித்திருக்கிறேன். அப்போது குர்நூல் தலைநகராக இருந்தது. 1956-இல், தெலங்கானா ஆந்திராவோடு சேர்க்கப்பட்டு ஹைதராபாத் தலைநகராக ஏற்கப்பட்டது.
ஆந்திரா என்று இருந்ததை தெலுங்கானாவுடன் சேர்த்து விசாலாந்த்ரா என்று ஆக்க முற்ப்பட்டு ஏனோ ஆந்திர பிரதேசம் ஆனது விசாலாந்த்ரா என்ற பெயரை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை
அது உள்ளூர் அரசியல் வேறுபாடுகள் காரணமாகத் தான் நிகழவில்லை என்று நினைக்கிறேன்.
Hi,
we would like inform you that now Tamil Writer WordPress Plugin is out. Visit http://www.monusoft.com/Products/WordPressPlugin/tabid/187/Default.aspx for downloading it. You can install this plug in and user can direclty input Tamil comment/post/page from comment box instead of using Tamil IME and then copy/pasting text in comment/post/page box.
Thank you
November 1, 2006 at 8:59 pm
என் ஞாபகப்படி 1953-ல்தான் ஆந்திரா பிரிந்தது. மதறாசை தமிழ்நாட்டுக்காகக் காப்பாறியது அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி அவர்களே. இது பற்றி நான் போட்ட பதிவில் எழுதியது:
“”மதறாஸ் மனதே” என்று ஆந்திர சகோதரர்கள் கோஷமிட்டனர். இதைப் பற்றி ஆராயப் புகுந்த நீதிபதி வான்சூ அவர்கள் சென்னையை இரு மாநிலங்களுக்கும் பொதுவானத் தலைநகராக வைக்கப் பரிந்துரை செய்தார். இது மட்டும் நடந்திருந்தால் மிகுந்தக் குழப்பம் நேர்ந்திருக்கும். ராஜாஜி அவர்கள் கடைசி வரை உறுதியாக இருந்து சென்னையைத் தமிழ்நாட்டுக்குக் காப்பாற்றித் தந்தார். அப்போது ஆந்திரப் பகுதிகளில் எழுப்பிய கோஷம்: “ராஜாஜி சாவாலி, ஆந்திர ராஷ்ட்ரம் ராவாலி”.
என்ன வேண்டுமானாலும் கத்திக் கொள் ஆனால் சென்னை கிடையாது என்று அவர் இருந்த உறுதியால் நேரு மற்றும் மற்ற மத்தியத் தலைவர்கள் சென்னை தமிழ் நாட்டுக்கே என்று முடிவு செய்து அதிகாரபூர்வ அறிக்கை விட்டனர். இவ்விஷயத்தில் ராஜாஜியின் பின்னால் எல்லா தமிழகக் கட்சியினரும் திரண்டு நின்றதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 05 – 04 – 1953 இதழில் கல்கி இதை “மதறாஸ் நமதே” என்று தலையங்கம் எழுதி வரவேற்றார்.”
பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/1_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்